இலங்கையின் மாகாண சபை முறைமையைப் பயன்படுத்தி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பரந்த வியூகமொன்றை இந்தியா பின்பற்றி வருவதாக ஓய்வுபெற்ற ரியர் அட்மிரலும், இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான டி.கே.பி. தஸநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு மற்றும் இழுபறி நிலையில் உள்ள மீனவர் விவகாரங்கள் யாவும் ஒரு பரந்த புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலின் (Geopolitical agenda) பாகமே என்றும் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மீனவ சமூகம் மற்றும் செல்வாக்குமிக்க நிதியளிப்பாளர் குழுக்களால் இயக்கப்படும் தமிழ்நாட்டின் அரசியல் இயக்கவியல், இலங்கை தொடர்பான விவகாரங்களில் தங்களின் நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இந்திய நடிகர் ஜோசப் விஜய் குறித்துக் கருத்துத் தெரிவித்த தஸநாயக்க, கச்சத்தீவு விவகாரத்தில் அவரது தலையீடானது இந்த மீனவ மற்றும் நிதியளிப்பாளர் குழுக்களிடையே தனது அரசியல் ஆதரவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இந்த இலக்கானது வெறும் கச்சத்தீவை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், இலங்கையின் கடல் வளம் மற்றும் மீன்பிடி வளங்களை முழுமையாக அணுகுவதே இதன் பரந்த நோக்கம் என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
இந்திய மீனவர்கள் ஏற்கனவே மீன்பிடி உரிமங்களை (Licences) பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது சொந்த அனுபவங்களை முன்வைத்த தஸநாயக்க, இலங்கை மீனவர்களுக்கு நாகப்பட்டினம் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதற்குப் பகரமாக, இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் பரந்த அனுமதியை வழங்குவதற்கான முன்மொழிவுகள் உட்பட இத்தகைய முயற்சிகள் கடந்த 60 வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இருப்பினும், இந்த நகர்வுகள் யாவும் ஒரு பெரிய மூலோபாயக் கட்டமைப்பிற்குள் (Strategic framework) வைத்தே நோக்கப்பட வேண்டும் என தஸநாயக்க உரிமை கோரியுள்ளார். இந்திய மத்திய அரசாங்கமானது “அகண்ட பாரதம்” (Akhand Bharat) என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படுவதாகவும், இதில் நிலத்தொடர்புகள், மின்சார விநியோக வழித்தடங்கள் மற்றும் எண்ணெய் குழாய்கள் மூலம் இலங்கையை இந்தியாவுடன் இணைத்து, நாட்டை நடைமுறையில் இந்தியாவின் ஒரு மாகாணமாக ஒருங்கிணைக்கும் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இலங்கைக்குள் ஏற்படும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் இத்தகைய நோக்கங்களை எளிதாக்கக்கூடும் என்றும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க எச்சரித்துள்ளார்