காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவது ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை நாங்கள் சந்திக்க சென்றோம். 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் எமது கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தல்களில் போட்டியிட்டதால் அவரை சந்திக்கச் சென்றோம்.
பிள்ளையானை நாங்கள் சந்திக்க சென்றதை அறிவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பிரான்ஸ்க்கு செல்ல வேண்டிய தேவையில்லை. மட்டக்களப்பு சிறைக்குச் சென்று பதிவுப்புத்தகத்தை ஆராய்ந்திருந்தால் அதில் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் எடுக்கும் சகல விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மாகாணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவது ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது.
மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி.யின் கட்சி தலைமையகம் தீர்மானிக்குமாயின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் இந்த அரசாங்கம் நடத்துமா என்பது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது என்றார்.