ள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12), மன்னாரில் மிக உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது, பசி பட்டினியால் வாடிய ஈழத்தமிழர்களின் உயிர் காக்க உதவிய ஒரே உணவான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அங்கு காய்ச்சப்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே 12 முதல் மே 18 வரை நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்தப்பட்ட இரத்தம் மற்றும் அனுபவித்த துயரங்களை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் இவ்வாறான கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் ஈழத்தமிழர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.