சென்னை:
ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்
தமிழ்த் திரையுலகைப் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து கிராமியச் சூழலுக்கு நகர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வியலைத் திரைப்படங்களாக உருவாக்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ரூ.2.50 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும்.
அரசு மைய அச்சகத்திற்கு நவீன வசதிகள்
-
தானியங்கி காகிதம் வெட்டும் இயந்திரம்: பணியிட விபத்துகளைத் தவிர்த்துப் பணியாளர் நலன் காக்க, சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.86 லட்சம் செலவில் நிரலாக்க தானியங்கி காகிதம் வெட்டும் இயந்திரம் நிறுவப்படும்.
-
நவீன உபகரணங்கள்: மேலான தொழில்நுட்பங்களுடன் அரசு அச்சகங்களை நவீனப்படுத்திட நுட்பமான Baking இயந்திரங்கள், Automatic Pasting and Strapping இயந்திரம் மற்றும் Numbering இயந்திரங்கள் ரூ.14.3 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
-
காகிதக் கிடங்கு மற்றும் பண்டக சாலை: சென்னை அரசு மைய அச்சகத்தில் நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய காகிதக் கிடங்கு மற்றும் பொதுப் பண்டக சாலை ஆகியவை 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.7.3 கோடியில் கட்டப்படும்.
-
ஒருங்கிணைந்த அச்சு மேலாண்மைத் திட்டம்: எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் அச்சிடத் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல், அச்சுப்பணிகள், விநியோகம், அச்சு இயந்திரப் பராமரிப்பு, கழித்தொதுக்கம் உள்ளிட்ட பணிகளைச் சீராக மேற்கொள்ள ஏதுவாக ‘ஒருங்கிணைந்த அச்சு மேலாண்மைத் திட்டம்’ (Comprehensive Printing Management System) செயல்படுத்தப்படும்.
5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
கவிஞர் கே.ஜீவபாரதி, பேராசிரியர் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம்.அகமது, சா.கந்தசாமி, டி.எம்.பீர் முகம்மது ஆகிய 5 தமிழறிஞர்களின் அருந்தமிழ் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்கள்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து புலங்களில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சமகால மற்றும் வளர்ந்து வரும் ஆராய்ச்சிப் போக்குகளுக்கு ஏற்பத் தொடர்ந்து சிறப்பாகத் தங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் நடத்தப்படும். இதற்கென ஒரு புலத்திற்கு ரூ.3 லட்சம் வீதம் ஐந்து புலங்களுக்கு மொத்தம் ரூ.15 லட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
செய்தித்துறை மற்றும் திரைப்படப் பயிற்சி நிறுவன மேம்பாடுகள்
-
கேமராக்கள் கொள்முதல்: மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் 41 கேமராக்கள் கொள்முதல் செய்யப்படும்.
-
கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV): தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும்.
#Bharathiraja #Theni #MinisterRajmohan #TamilDevelopment #InformationDepartment #TamilCinema #DirectorBharathiraja #TamilNaduNews #ChennaiNews #PressModernization #BookNationalization #TamilUniversity #Thanjavur #MGRFilmInstitute #CCTVCamera #TamilScholars #PrintingDepartment #TNGovtSchemes #TamilNews #LatestNewsTN