செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
செம்மணியில் இன்றைய தினம் (30) கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியதன் பின்னர் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் துறவறத்தினரும் ஆகிய நாம், இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் இலங்கையின் ஆயுத மோதலின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் அனைவரையும் குறித்த ஆழ்ந்த மேய்ப்புப்பணிசார் அக்கறையால் இம்மடலை எழுதுகின்றோம்.
2025 ஜூன் மாதத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அமைவிடத்துக்கு தாங்கள் மேற்கொண்ட வருகையை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். உண்மைக்கும் நீதிக்கும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தங்களது வருகை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்தது.
2025 பெப்ரவரி மாதத்தில் செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் அச்சமூட்டும் அளவில் மனித எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. 2026 ஜூலை 21ஆம் திகதி குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட, குறைந்தது 454 எலும்புக்கூடு எச்சத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்களும் திகதிகளும், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதும் இதுவரை இறுதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணையின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, நம்பகமான சான்றுகள் இன்றி எவர் மீதும் பொறுப்பைச் சுமத்தவோ நாம் விரும்பவில்லை.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் ஆய்வுக் குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க பணியை நாம் அங்கீகரிக்கின்றோம்.
இருப்பினும், தடயவியல் திறன், விசாரணைச் சுயாதீனம், சான்றுகளைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல், குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் எழுப்பியுள்ள கரிசனைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.