முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது கைது மற்றும் தடுப்புக்காவலின் சட்டப்பூர்வ தன்மையைக் கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்துள்ள ரிட் (writ) மனுவில் தம்மையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி கோரி, முக்கிய பௌத்த துறவிகள் உள்ளிட்ட பல தனிநபர்களும் அமைப்புகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த இடைபுகுதல் மனுக்கள் (intervention petitions) கலாநிதி குணதாச அமரசேகர, வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், வணக்கத்திற்குரிய தாபன சுமனவங்ஷ தேரர், திம்புலாகல ராகுலாலங்கார தேரர் மற்றும் ‘குளோபல் ஸ்ரீலங்கன் போரம்’ (Global Sri Lankan Forum) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது நிலுவையில் உள்ள இந்த ரிட் மனுவில் தங்களை எதிர்மனுதாரர்களாக (Party Respondents) சேர்ப்பதற்கு அனுமதித்து உத்தரவிடுமாறு அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவை, ஏற்கனவே உத்தியோகபூர்வ விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்றும், அக்குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து அவ்விசாரணைகளில் பாதகமான முடிவுகளே எட்டப்பட்டிருந்தன என்றும் அந்த இடைபுகுதல் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
‘செனல் 4’ (Channel 4) செய்தி ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாடல்கள் உத்தியோகபூர்வ விசாரணைகளில் நம்பகத்தன்மையற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட அந்த காலப்பகுதியில் சலே இலங்கையில் இருக்கவில்லை என்பதையும் அவ்விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட பல உத்தியோகபூர்வ விசாரணைகள், இத்தாக்குதல்களுக்கான பொறுப்பை சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடன் தொடர்புடைய ‘தேசிய தவ்ஹீத் ஜமாஅத்’/ஐஎஸ் (ISIS) வலையமைப்பின் மீதே தொடர்ச்சியாக சுமத்தியுள்ளன என்றும், இதில் சுரேஷ் சலேவுக்கு எவ்வித தொடர்பும் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அடிப்படை உரிமைகள் மனு இலக்கம் SC FR 163/2019 மற்றும் அது தொடர்பான ஏனைய வழக்குகளை விசாரித்த இலங்கை உயர் நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சுரேஷ் சல்லே அந்த வழக்கு நடவடிக்கைகளில் ஒரு தரப்பாக இருந்தபோதிலும், அவருக்கு எதிராக எவ்வித பாதகமான முடிவுகளையும் வெளியிடவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.