இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (04) நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு செளந்தர்ஸ் விளையாடுக் கழகத்தை பெனால்டியில் வென்றே நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் முதற் தடவையாக இத்தொடரில் சம்பியனானது.
போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டியில் சென். மேரிஸின் கோல் காப்பாளர் ஆர்னிகன் மூன்று உதைகளை அபாரமாகத் தடுக்க 3-1 என்ற ரீதியில் வென்று மேரிஸ் சம்பியனானது.
அரையிறுதிப் போட்டிகளில் பெனால்டியில் ஜாவா லேனை 5-4 என்ற ரீதியில் வென்று மேரிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், மாவனல்ல விளையாட்டுக் கழகத்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு செளந்தர்ஸ் முன்னேறியிருந்தது.