கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக மாகாண இயற்கை வளங்கள் அமைச்சர் கிம் மாஸ்லண்ட் (Kim Masland) தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (21) மாலை அனாபொலிஸ் கவுண்டியில் உள்ள மொஷெல் (Moschelle) என்ற கிராமப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைப்பதற்காகச் சென்ற ‘பிரிட்ஜ்டவுன் தன்னார்வத் தீயணைப்புப் பிரிவின்’ (Bridgetown Volunteer Fire Department) வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தீயணைப்பு வீரர் 40 வயதுடைய அலெக்சாண்ட்ரு உய்சிற்றா (Alexandru Uichita) எனத் தீயணைப்புத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் அடையாளப்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இத் தீயணைப்புப் பிரிவில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
காட்டுத்தீயை அணைப்பதற்கான தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அலெக்சாண்ட்ருவிற்கு திடீரென கடுமையான உடல்நலக் குறைவு (Sudden medical episode) ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்த ஏனைய தீயணைப்பு வீரர்கள் அவரை உடனடியாகக் காப்பாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
தான் ஆழமாக நேசித்த சமூகத்திற்காகச் சேவை செய்தபடியே, தனது சக தீயணைப்பு வீரர்களின் மத்தியிலேயே அவர் தனது இறுதி மூச்சை சுவாசித்துள்ளார் எனத் தீயணைப்புத் துறை உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
இவ் விபரீதம் குறித்து சனிக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் கிம் மாஸ்லண்ட்:
“இவ் உயிரிழப்பானது, தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தும் அசாதாரணமான தைரியம் மற்றும் சுயநலமற்ற தியாக உணர்வை நமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றது. அவர்கள் நிரந்தர உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி அல்லது தன்னார்வத் தொண்டர்களாக இருந்தாலும் சரி, தங்களது அண்டை வீட்டாரையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத் தங்களின் உயிர்களையே ஆபத்தில் ஆழ்த்துகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் வீரமும் எப்போதும் வீண் போகாது. இந்தத் துயரம் தீயணைப்பு எல்லைகளையும் தாண்டி ஒட்டுமொத்த மாகாணத்தையும் உலுக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மொஷெல் பகுதியில் பரவிய இக் காட்டுத்தீ கடந்த வியாழக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், இது சுமார் 1.19 ஹெக்டேயர் பரப்பளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த தீயணைப்பு வீரரான அலெக்சாண்ட்ருவிற்கு மனைவியும், மூன்று சிறு குழந்தைகளும் உள்ளனர் என பிரிட்ஜ்டவுன் தன்னார்வத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
“அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் துயரிலும், அவர் ஆற்றிய உன்னதமான சேவைக்கான நன்றியறிதலிலும் எங்களது தீயணைப்புத் திணைக்களம் எப்போதும் துணை நிற்கும். எங்களது வீரரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்வதற்காக, அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு (Privacy) பொதுமக்கள் மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.”
அன்னாரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க விரும்பும் பொதுமக்கள், இணையவழி நிதிச் சேகரிப்புப் பக்கங்களை (Crowdfunding) நம்ப வேண்டாம் என்றும், அனைத்து நன்கொடைகளும் தீயணைப்புத் துறையின் பொருளாளர் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமாகவே உத்தியோகபூர்வமாகச் சேகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் அப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.