கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போதைய நிலைமை ‘ஆழ்ந்த கவலையளிப்பதாக’ சர்வதேச மருத்துவக் தொண்டு நிறுவனமான எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இத்தனை அதிகமான பாதிப்புகள் முன்னெப்போதும் பதிவாகியதில்லை என சர்வதேச மருத்துவக் தொண்டு நிறுவனமான எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஆலன் கொன்சாலேஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, கொங்கோவில் எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ளதுடன், குறைந்தது 246 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
பாதிப்புகள் மிக மோசமாக உள்ள கொங்கோவின் கிழக்கு மாகாணமான இத்தூரிக்கு, வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் நேரில் மேற்பார்வையிடுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை பணிப்பாளர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து சர்வதேச மருத்துவக் தொண்டு நிறுவனமான எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் பிரதி பணிப்பாளர் கொன்சாலேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொற்றுப் பரவல் பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எபோலா வரலாற்றிலேயே இவ்வளவு விரைவாக இத்தனை வழக்குகள் பதிவானதில்லை. எமது மருத்துவக் குழுக்களின் தடுப்பு நடவடிக்கைகளையும் தாண்டி வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகின்றது.
நாளுக்கு நாள் புதிய நோயாளர்கள் பதிவாகி வருகின்ற போதிலும், நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகள் இன்னும் பரிசோதிக்கப்படாமல் உள்ளன. இதனால் இந்தத் தொற்றின் உண்மையான தீவிரமும் அளவும் தற்போதைக்கு யாருக்கும் தெரியாது.
எல்லையடைப்புகள், விமான நிலைய மூடல்கள் மற்றும் கொங்கோவில் நிலவும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இத்தூரி மாகாணத்தின் தலைநகரான புனியாவுக்குச் சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், அப்பகுதி மக்கள் தங்களது பாரம்பரிய இறுதிச் சடங்குகளின் போது உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார். எபோலா உடல்களைத் தொடுவதன் மூலம் வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடும் என்பதால், இந்த ஆபத்தான சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், புனியா நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை தடையின்றித் தொடர்வதுடன், விமான நிலையங்களில் கை கழுவும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் மொழிகள் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் விழிப்புணர்வுத் தகவல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
கொங்கோவில் பரவி வரும் ‘புந்திபுகியோ’ எனப்படும் இந்த அரிய வகை எபோலா வைரஸுக்கு முறையான தடுப்பூசிகளோ சிகிச்சைகளோ இல்லை என்பதுடன், இது தொற்றாளர்களின் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொல்லும் கொடூரத்தன்மை வாய்ந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்திலும் ஒருவருக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொங்கோவிலிருந்து திரும்பிய 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தொற்று அறிகுறிகளுடன் விசேட தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.