ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டவரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்காவில் 77ஆண்டுகளாக நீடித்துவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்தினால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றை ஆட்சி அரசு) அரசியல் யாப்பே மீளவும் கொண்டுவரப்படவுள்ளது. ஒற்றை ஆட்சி தொடர்பான தீர்வு யோசனைகளை நிராகரித்து இனப் பிரச்சினைக்கான தீர்வாகக் கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினைத் தயாரிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசமும் அதன் தனித்தவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக ஒப்பந்தம் ஒன்றை தமிழர் தேசத்துக்கும் – சிங்கள தேசத்துக்குமிடையில் கைச்சாத்தாகிடும் வகையில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படல் வேண்டும் என்பது ஈழத் தமிழர் நிர்ணய பொதுச்சபையின் நிலைப்பாடாகும். இவற்றின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி . விக்னேஸ்வரன் அழைப்பின் பேரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலை சட்டத்தரணி கு. குருபரன், சமூகச் செயற்பாட்டாளர் சி. சுந்தரேஸ்வரன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். பல்வேறு குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு தனது கருத்துகளைத் தெரியப்படுத்தியது