ஜிரோக்ஸ்வில்: கனடாவின் வடமேற்கு அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் நேற்று இரவு வீசிய சக்திவாய்ந்த சூறாவளி (Tornado), மரங்களை வேரோடு பிடுங்கியதுடன், ஜிரோக்ஸ்வில் (Girouxville) கிராமத்திலுள்ள பல வீடுகளின் கூரைகளையும் தூக்கி வீசிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை மாலை வீசிய இந்தச் சூறாவளி காரணமாகப் பரந்தளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பீஸ் ரிவர் (Peace River) பகுதிக்கு தெற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, 300 குடியிருப்பாளர்களைக் கொண்ட அந்த சிறிய கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கான மின்சார விநியோகமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடாவின் சூறாவளிச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ‘நோர்த் ஆர்ன் டொர்னாடோஸ் ப்ராஜெக்ட்’ (Northern Tornadoes Project – NTP) அமைப்பு, திங்கட்கிழமை மாலை வடமேற்கு அல்பர்ட்டாவின் பீஸ் ரிவர் பகுதியில் “குறைந்தது ஒரு சூறாவளி” பதிவாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
நோக்கி வந்த சுழல்காற்று:
இது குறித்து ஜிரோக்ஸ்வில் கிராமத்தின் பிரதான அதிகாரி ரைலி முல்லன் (Ryley Mullen) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் ஒரு இராட்சதச் சுழல்காற்று (Funnel cloud) கிராமத்தை நோக்கி நகர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
“சமூகக் கால்பந்து மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சிறுவர்கள், அடிவானத்தில் சாம்பல் நிறத்தில் சுழன்றுகொண்டிருந்த அந்த இராட்சதக் காற்றைக் கண்டு பீதியடைந்தனர். அது நேராக எங்களை நோக்கித்தான் வந்தது. அந்தச் சுழல் மேகம் எங்கள் தலைக்கு மேலாகவே கடந்து சென்றது”
என்று முல்லன் விவரித்தார்.
கடுமையான காற்று கிராமத்தைக் கடந்தபோது, சில சொத்துக்களின் கூரைகள் முற்றாகப் பெயர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறிய கொட்டகைகள் மற்றும் வெளிக்கட்டிடங்கள் அவற்றின் அடித்தளத்துடன் பெயர்க்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதாகக் கூறினார். இந்தச் புயலின் பாதையில் சுமார் 30 முதல் 40 கட்டிடங்கள் வரை சேதமடைந்துள்ளதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.
வியக்கவைத்த பெருமழை:
இந்தச் சூறாவளியின் சேதப் பாதை மிகவும் குறுகியதாகவும், எதிர்பாராத விதமாகவும் அமைந்திருந்தது. மிகக் கடுமையாகச் சேதமடைந்த சில கட்டிடங்களுக்கு அருகிலிருந்த பிற கட்டிடங்கள் எந்தவொரு பாதிப்பும் இன்றி அப்படியே காணப்பட்டன.
“மரங்கள் விழுந்து கிடக்கின்றன. பல கட்டிடங்களின் கூரைகளும் ஓடுகளும் காணாமல் போயுள்ளன. சிலரது வீட்டுப் பக்கத்துக் கொட்டகைகள் காற்றில் பறந்து வந்து மற்றவர்களின் வீட்டின் கூரைகள் மேல் விழுந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு பலத்த மழை பெய்து நான் பார்த்ததே இல்லை. இது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது”
என்று முல்லன் மேலும் கூறினார்.
தற்போது உள்ளூர் நகராட்சி ஊழியர்களும் அவசரக்கால மீட்புக் குழுவினரும் கிராம மக்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த இயற்கை அனர்த்தத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
இப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான டாட் லோவன் (Todd Loewen) விடுத்துள்ள சமூக ஊடகப் பதிவில், தான் இரவோடு இரவாகக் கிராமத்திற்குச் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்