ஈரானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமானது மிகச் சிறந்த மற்றும் முறையான ஒன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது ட்ருத் சமூக வலைதளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு பெரும் தொகை பணத்தை அள்ளிக்கொடுத்து, அணு ஆயுதம் தயாரிப்பதற்கான தெளிவான மற்றும் திறந்த பாதையையும் ஏற்படுத்திய ஒபாமாவின் ஒப்பந்தத்தைப் போல இந்த புதிய ஒப்பந்தம் இருக்காது என அவர் விமர்சித்துள்ளார்.
தற்போதைய ஒப்பந்தம் அதற்கு முற்றிலும் நேர்மாறானது, ஆனால் அதை யாரும் இன்னும் பார்க்கவில்லை.
எனவே அதனை முன்கூட்டியே விமர்சிப்பது அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் எவ்வித அவசரமும் காட்ட வேண்டாம் என தமது பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கிவிட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தில் 60 நாட்கள் போர்நிறுத்த நீடிப்பு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
டிரம்பின் சமூக ஊடகப் பதிவொன்றில், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும், ஆனால் இரு தரப்பும் போதிய நேரத்தை எடுத்துக்கொண்டு அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.