ஸ்கார்பரோவில் (Scarborough) இரண்டு நபர்கள் படுகாயமடையக் காரணமான வீதிச் ரேஸ் (Street racing) விபத்து தொடர்பாக ஒரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஜூலை 17 ஆம் திகதி காலை 9:30 மணியளவில், மீடோவேல் வீதிக்கு (Meadowvale Road) அருகில் உள்ள ‘ஹைவே 2A’ பாதையில் கிழக்கு நோக்கிப் பச்சை நிற லம்போகினி (Lamborghini) எஸ்.யூ.வி மற்றும் வெள்ளை நிற மெர்சிடீஸ் (Mercedes) ஈ-கிளாஸ் கார் ஆகிய இரண்டும் அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.
ஒரு கட்டத்தில், மெர்சிடீஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்ற மூன்றாவது வாகனமான வெள்ளை நிற போர்ட் எஃப்-150 (Ford F-150) ரக வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த மெர்சிடீஸ் கார் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து லம்போகினி காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் போர்ட் வாகனத்தில் பயணித்த 44 வயது ஆண் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேளை, மெர்சிடீஸ் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் மற்றும் அதில் பயணித்த 24 வயது ஆண் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து விபத்துடன் தொடர்புடைய லம்போகினி காரின் சாரதியை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த அகில் கார்டன் ஹேவுட் (Akil Gordon Heywood – 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி உடல் காயங்களை ஏற்படுத்தியமை, விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல் சென்றமை மற்றும் ஆபத்தான பந்தய சாகசத்தில் ஈடுபட்டமை (Stunt driving) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த இருவரின் தற்போதைய நிலை குறித்தோ அல்லது மேலதிகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தோ பொலிஸார் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.