ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், இலங்கையின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யா குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கவும் ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, உக்ரைனுடனான போரில்ரஷ்யாவில் இருந்தபோது உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு இழப்பீடு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது. ரஷ்யா இலங்கையின் உறுதியான நண்பனாகத் தொடர்வதோடு, தற்போதைய பொருளாதார சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உதவுவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ருடென்கோ வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையின் அழகு மற்றும் மக்களின் விருந்தோம்பல் குறித்து ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வழங்கிய நேர்மறையான கருத்துக்களையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவின் இந்த சரியான நேரத்திலான உதவிக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 70 ஆண்டுகளை நெருங்கி வருவதை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக நீண்டகால வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் எதிர்கால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்த வரலாற்று ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.