நாமக்கல்:
“மத்திய அரசை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை; இணக்கமான சூழ்நிலையில்தான் அணுகுவோம்” எனத் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசின் கொள்கை மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “தவெக என்பது மதச்சார்பற்ற, சமூக நீதிக் கொள்கையைக் கொண்ட ஒரு பேரியக்கம். எங்களது ஆட்சிக்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால், குதிரைப் பேரத்திற்கான அவசியமே இல்லை; அதனை முதலமைச்சர் விஜய்யும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது போலவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் விஜய் விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவார்” என்றார்.
தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பேசிய அவர், “நீட் தேர்வில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வி மற்றும் மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து முயற்சி செய்வோம். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதால் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் தவெக முதல் ஆளாகக் குரல் கொடுக்கும். அதே நேரத்தில், மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்குத் தேவையான நிதிகளைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதே எங்களது நோக்கம். மத்திய அரசுடன் முழு ஒத்துழைப்புடன் இணக்கமான பாதையிலேயே பயணிப்போம்” எனத் தெளிவுபடுத்தினார். தவெக-வின் இந்த இணக்கமான அரசியல் நகர்வு தற்போதைய அரசியல் சூழலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
#ArunrajTVK #VijayAsCM #CentralGovtRelations #BreakingNews #May16 #NamakkalNews #TamilNaduPolitics #TVK_Government #Federalism #StateRights #AntiNEET #ThalapathyVijay #NewGovernmentTN #Secularism #SocialJustice #EPS_Meeting #CentralFunds #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_