பாராளுமன்றக் கண்காணிப்பில் நடுநிலைமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழு (COPE) தன்னிச்சையாகவோ அல்லது ஓர் அரசியல் ஆயுதமாகவோ பயன்படுத்தப்படக் கூடாது என எச்சரித்துள்ளார்.
பொது நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கோப் (COPE) குழு முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சுயாதீன விசாரணைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக சிலரை இலக்கு வைப்பதற்கே அதன் அறிக்கைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கவலைகள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
“கோப் அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும், விசாரணைகள் நிறைவடடைவதற்கு முன்போ அல்லது எந்தவொரு நீதிமன்றமும் குற்றத்தை தீர்மானிப்பதற்கு முன்போ, தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களையோ பகிரங்கமாகக் கண்டிப்பதற்கு அதைப் பயன்படுத்தக் கூடாது. உரிய சட்ட நடைமுறைகள் (due process) மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற கருத்தாக்கம் ஆகியவை மதிக்கப்பட வேண்டிய அடிப்படை விழுமியங்களாகும்,” என்று சாணக்கியன் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கோப் விசாரணைகளுக்கான விடயங்களைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், சில பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் வேளையில், அதே அளவு அல்லது அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிற விடயங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“முந்தைய கோப் குழுவின் உறுப்பினராக, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் பில்லியன் கணக்கான ரூபா பொதுப் பணத்துடன் தொடர்புடைய பாரிய கடன் நிலுவைகளை (non-performing loans) நான் அம்பலப்படுத்தினேன். ஆனால் இன்று, அந்தப் பிரச்சினைகள் தேசிய விவாதத்திலிருந்து மறைந்துவிட்டதாகத் தெரிகிறது; அதேவேளை மற்ற விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று அவர் கவலை வெளியிட்டார்.
கோப் குழு மீதான பொதுமக்களின் நம்பிக்கை, அதன் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாமல், அது விசாரணைகளைத் தேர்ந்தெடுக்கும் முறையின் நேர்மையிலும் தங்கியுள்ளது என்று சாணக்கியன் வலியுறுத்தினார்.
ஊழல், மோசடி அல்லது நிதி தவறான நிர்வாகம் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் பயமோ தயவுதாட்சணியமோ இன்றி ஒரே மாதிரியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“கோப் குழு ஒரு சுயாதீனமான கண்காணிப்பு அமைப்பாகவே இருக்க வேண்டும்; அரசியல் ரீதியாக இலக்கு வைப்பதற்கான களமாக மாறக்கூடாது. பாராளுமன்றத்தின் கண்காணிப்புப் பொறுப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்குச் சமமான தரநிலைகள், வழக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய சட்ட நடைமுறைகளுக்கான மரியாதை ஆகியவை அத்தியாவசியமானவையாகும்,” என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.