இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தான் சிங்கப்பூருக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக வேறொரு திகதியை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, இம்மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு மீள அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புக்கு அருகிலுள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் பல வீடுகளை சட்டவிரோதமான முறையில் சிலருக்கு வழங்குவதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்கியமை தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.