உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்த அரசாங்கம் எடுக்கும் முயற்சி, நீதித்துறைக்குள் முன்னெடுக்கப்படும் ஒரு அப்பட்டமான அரசியல் தலையீடாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதற்குரிய சட்டத்திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இது மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும்.
இந்த வயதெல்லை அதிகரிப்புக்கு எவ்வித நியாயமான காரணங்களும் கிடையாது. நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் நிலையிலும் அரசாங்கம் இதையே செய்ய முயற்சிக்கிறது.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், தான் அளித்த எந்தவொரு பொய் வாக்குறுதியையும் நிறைவேற்றவோ அல்லது மக்களின் கனவுகளை நனவாக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு காரியமும் முற்றாகத் தோல்வியிலேயே முடிகிறது.
நாடு முழுவதிலும் வான்சன்னத்தனமான செயல்கள், ஊழல், மோசடி, திருட்டு, வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பின்னணியில், முற்றாகத் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் தங்களை ஓரளவுக்கேனும் காப்பாற்றிக் கொள்ளவும், தமக்கு எதிராகச் செயல்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை அடக்கவும் நோக்கமாகக் கொண்டே இந்த அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையாகும்.
அரசாங்கத்தின் இந்த ஆபத்தான நகர்வுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் இல்லாதவாறு சுமார் 4000 சட்டத்தரணிகள் பங்கேற்ற அவசர பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மேல்நீதிமன்ற நீதிபதிகள் சங்கமும் கொழும்புக்கு வருகை தந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
எந்தவொரு நீதிபதியோ அல்லது சட்டத்தரணியோ இந்தத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் என எவருமே இதனை விரும்பாத நிலையில், அரசாங்கத்துக்கு மட்டுமே இது தேவையாக உள்ளது.
பெலவத்தையில் உள்ள தலைமைப்பீடத்துக்கு தேவை என்பதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றவோ அல்லது நீதித்துறையை அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப இயங்க வைக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது ஜனநாயகத்தின் இறுதி ஊர்வலமாகவே அமையும்.
தற்போது உயர்நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்களும், கீழ் நீதிமன்றங்களில் 17 வெற்றிடங்களும் நிலவுகின்றன. வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதே சரியான தீர்வாகும். அதை விடுத்து ஓய்வுபெறும் வயதை மட்டும் கூட்டுவதால் நீதித்துறையின் தற்போதைய பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
இது ஒரு தவறான முன்உதாரணமாக அமையும் என்பதால், இவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவருவதாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் வலியுறுத்துகின்றனர். நாட்டின் குடிமக்களுக்கு இதில் விருப்பமா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் உரிமை உண்டு.
எனவே, அரசாங்கம் இத்தகைய விளையாட்டுகளையும் பெலவத்தையின் உத்தரவுகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு, நாட்டிற்குப் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்றார்.