நிலக்கரி மோசடி தாெடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு உதவுவதற்கே வலுசக்தி அமைச்சர்பதவி விலகியதாக தெரிவிப்பது போலித்தனமான காரணமாகும். அத்துடன் நிலக்கரி கொள்வனவு பொறுப்பை அமைச்சரின் மீது மட்டும் சுமத்திவிட்டு, அரசாங்கம் முற்றாக ஒதுங்கிக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது என்பது, ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அந்த அமைச்சர் பொறுப்பேற்பதைக் குறிக்கிறது. இது ஒரு முக்கியமான விடயமாகும். இது ஏதோ ஒரு அற்பமான அல்லது சில்லறைத் தனமான காரணத்திற்காக நடந்தது ஒன்றல்ல. பாரதூரமான, கடுமையான பிரச்சினை ஒன்றில் தம்மால் ஏற்பட்ட தவறு அல்லது குறைபாட்டிற்கான பொறுப்பை ஏற்பதை இந்த இராஜினாமா உணர்த்துகிறது. இது ஒரு பாரிய நடவடிக்கையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இவ்வாறானதொரு செயல்முறை இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக எந்தவிதமான பயனற்ற சாக்குப்போக்குகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை.ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளில் அமைச்சரின் ராஜினாமா எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தாது.
அது ஒரு போலித்தனமான காரணமாகும். பிரதான பிரச்சினை என்னவென்றால், இந்த நிலக்கரி கொள்வனவுக்கு அமைச்சர் மாத்திரம் தான் பொறுப்பு கூற வேண்டுமா என்பதாகும். பொறுப்பை அமைச்சரின் மீது மட்டும் சுமத்திவிட்டு, அரசாங்கம் முற்றாக ஒதுங்கிக்கொள்ள முடியாது. அமைச்சர் மீது மாத்திரம் முழுப் பொறுப்பையும் சுமத்துவது எவ்வகையிலும் நீதியாகாது.
நிலக்கரி ஒப்பந்தம் வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க தீர்மானித்தது யார்? அந்தப் பொறுப்பை ஒட்டுமொத்த அரசாங்கமும் கூட்டாக ஏற்க வேண்டும்.
அத்துடன் விலைமனு வழங்கும் போது பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஏதோ ஒரு உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அந்தச் செயல்முறை அந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கு மாத்திரம் திருத்தப்பட்டிருப்பது இங்கு புலனாகிறது. மறுபுறம், முழுச் செயல்முறையையும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது.
இங்கு கொள்முதல் செய்யப்பட்டது ஒரு கப்பல் மாத்திரமல்ல, பல கப்பல்கள் ஆகும். அனைத்துக் கப்பல்களிலும் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், அனைத்துக் கப்பல்களையும் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டது.
ஒப்பந்தத்தின்படி, கப்பல்களில் கொண்டு வரப்பட்ட தரமற்ற நிலக்கரியை நிராகரிப்பதற்கான தெளிவான உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்குரிய அந்த உரிமையை நடைமுறைப்படுத்தாமல், தொடர்ந்து நிலக்கரி கப்பல்களை பொறுப்பேற்பது என்பது ஒட்டுமொத்த அரசாங்கத்தினதும் நிலைப்பாடே அன்றி, அமைச்சரின் தனிப்பட்ட முடிவாக இருக்க வாய்ப்பில்லை. இங்கு அமைச்சரை ஒரு பலிக்கடாவாக்கி, மற்ற அனைவரும் தங்களை சுத்தமானவர்களாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியே தெரிகிறது.
நடைமுறையிலுள்ள நீதிமன்றத் தீர்ப்பின்படி, பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டிருந்தால், நஷ்டஈடு வழங்குவது ஒரு கட்டாயக் கடமையாகும். அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக இந்தச் செயல்முறையைக் குறிப்பிடலாம்.
அரசாங்கமே ஒப்புக்கொண்டபடி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் பல பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் போது அதன் வினைத்திறன் குறைவாக இருப்பதால், அந்த நிலைமையை ஈடுகட்ட வேறு வழிகளைக் கையாள வேண்டியுள்ளது.
அதிலொரு நடவடிக்கை என்னவென்றால், மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு எட்டு லட்சம் லீற்றருக்கும் அதிகமான டீசலைச் செலவிடுவதாகும். இதனால் போக்குவரத்து, உர உற்பத்தி மற்றும் குடிநீர் வழங்கலுக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவு டீசல், மின்சார உற்பத்திக்காக செலவிட வேண்டியுள்ளது.
இந்தச் சம்பவங்களை பண ரீதியாக மதிப்பிட முடிந்தது என்றாலும், தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் தற்போது நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப் பாரியதாகும். நிதி இழப்புக்கு மேலதிகமாக, இந்தச் சூழல் பாதிப்பு நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
இந்த பின்னணியில், ஒரு நபர் இராஜினாமா செய்ததன் மூலம் முழுச் செயல்முறையையும் மறைத்துவிட முடியாது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, ‘பொதுப் பொறுப்பு மற்றும் நம்பிக்கை’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நஷ்டஈடு வழங்க வேண்டிய தேவை வலுவாக முன்னெழுந்துள்ளது.