தமிழ் தாயகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) அமைப்பின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson), பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இனப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது முள்ளிவாய்க்காலில் இருந்து ‘தமிழ் கார்டியன்’ (Tamil Guardian) ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த பியர்சன், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தமிழ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் பக்கம் நிற்பது முக்கியம் என்று கூறினார்.
“இந்த நாளில் இந்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், இந்தத் தருணத்தை நினைவு கூருவதற்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் இங்கு வந்திருப்பது மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
“நிச்சயமாக, போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மிக முக்கியமான இடம் இதுவாகும். ஆனால் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லை.”
ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போன தங்களது உறவினர்கள் குறித்த பதில்களை பல தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து தேடி வருவதாக பியர்சன் குறிப்பிட்டார்.
“பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், பதில்களுக்காகக் காத்திருக்கிறார்கள், மேலும் இந்த குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் ஒரு நாள் பொறுப்புக்கூற வைக்கப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
2009 ஆம் ஆண்டு ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெருமளவிலான கொடுமைகளை நினைவுகூரும் வகையில், வடக்கு-கிழக்கு மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை’ அனுஷ்டிக்கும் நிலையிலேயே அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இறுதி இராணுவத் தாக்குதலின் போது பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சு, மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், கட்டாயக் காணாமலாக்கல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மனித உரிமை அமைப்புகள், ஐநா நிபுணர்கள் மற்றும் சர்வதேச புலனாய்வாளர்கள் பலமுறை ஆவணப்படுத்தியுள்ளனர்.
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலைப் பெற்றுக்கொள்வதில் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியையும் பியர்சன் விமர்சித்தார்.
“ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, ஆனால் தீர்மானங்கள் மட்டும் போதாது,” என்று அவர் கூறினார்.
“சர்வதேச பங்களிப்பைக் கொண்ட ஒரு வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கி வெளிநாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.”
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையின் தற்போதைய நிர்வாகம் இதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தற்போதைய இலங்கை அரசாங்கமும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் பொறுப்புக்கூறல் குறித்து பல வாக்குறுதிகளை அளித்திருந்தது,” என்று அவர் தெரிவித்தார். “எனவே, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், 17 ஆண்டுகளுக்குப் பிறகாவது ஏதேனும் ஒரு வடிவிலான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் இதுவே சரியான தருணமாகும்.”
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் தொடர்ச்சியான வேதனைகள் குறித்து விவாதித்த பியர்சன், நீதி மிக நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
“நீதி மிக மிக நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“இங்குள்ள குடும்பங்களுடன் பேசும்போது, அவர்கள் சோர்வடைந்திருப்பதை அறிய முடிகிறது, ஆனாலும் அவர்கள் பொறுப்புக்கூறலை விரும்புகிறார்கள், அது நடக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் மூலமே இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாது என்ற உறுதிப்பாடு கிடைக்கும்.”
பொறுப்புக்கூறல் விவகாரத்தை தொடர்ந்து ஓரங்கட்ட முடியாது என்பதை பியர்சன் வலியுறுத்தினார். “அரசாங்கத்திற்கு பல வேறுபட்ட முன்னுரிமைகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இலங்கையின் வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் கிடைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
“உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படுவது மிகவும் அவசியமானதாகும்.”