சென்னை:
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை ஆளும் தவெக அரசு மாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரும் அரசு அறிவிப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் உள்ள குடும்பங்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுச் செல்வதில் ஏற்படும் சிரமங்களைப் போக்குவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீடு தோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டம் ‘மகளிர் பயணம்’ என்றும், ‘முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்றும், ‘நான் முதல்வன்’ திட்டம் ‘திறன் தமிழ்நாடு’ என்றும் மாற்றப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரும் அரசு அறிவிப்புகளில் இடம்பெறாமல் போயிருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்குப் பதிலாக, \”பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்\” என்ற பொதுவான குறிப்புடன் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகப் பொருட்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்றும், தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் பெயர் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் அரசு அறிவிப்புகளில் நீக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய அரசின் திட்டங்களின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில்தான் இந்தப் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எனினும், திட்டத்தின் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படும் என அரசு தரப்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#DMK #ThayumanavarThittam #TVK #CmVijay #TamilNaduGovt #RationScheme #BmNews #TamilNews #BreakingNewsTN #PoliticalUpdate #SchemeNameChange #TamilNaduPolitics #TamilNewsLive