டொராண்டோ காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து, அவன் சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு (youth centre) மாற்றப்பட்டுள்ளதாக மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பு அமைப்பு (SIU) தெரிவித்துள்ளது. இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சிறுவர்கள் (மற்றொரு 12 வயது சிறுவன் மற்றும் ஒரு 14 வயது சிறுவன்) மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈஸ்ட் யார்க் (East York) பகுதியில் திருடப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதியதாகக் கூறி, திங்கட்கிழமை அன்று அவனைக் காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.
சிறப்பு புலனாய்வுப் பிரிவின் (SIU) கூற்றுப்படி, நகரின் கிழக்கு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை நிலையத்திற்கு (subway station) அருகில் வாகனம் ஒன்று திருடப்பட்டதாக அதிகாலை 1:30 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இரண்டு ரோந்து வாகனங்களில் (police cruisers) வந்த அதிகாரிகள், லீசைட் பாலத்தில் (Leaside Bridge) வைத்து அந்தத் திருடப்பட்ட வாகனத்தைச் சூழ்ந்து நிறுத்த முயன்றதாக SIU முன்னதாகத் தெரிவித்தது.
அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த சிறுவன், தனது வாகனத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதியதாக SIU குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தை நிறுத்தும் முயற்சியில் அந்த அதிகாரி தனது துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். திருடப்பட்ட அந்த காரின் உள்ளே ஓட்டுநரைத் தவிர, 12 மற்றும் 14 வயதுடைய மேலும் இரண்டு சிறுவர்கள் இருந்துள்ளனர்.
அதிகாரி மீது வாகனம் மோதுவதற்கு முன்னரா அல்லது பின்னரா துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.
அந்நான்கு சிறுவர்களும் பின்னர் டான்லான்ட்ஸ் (Donlands) மற்றும் பிளாய்ட் (Floyd) அவென்யூக்களுக்கு அருகில் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அதன்பின், வாகனத்தை ஓட்டிய 12 வயது சிறுவன் ஒரு தொகுதி (block) தூரத்திற்கு அப்பால் வைத்துப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.
படுகாயமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், எனினும் அவனது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இளம்பிராய குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ (Youth Criminal Justice Act) விதிகளின்படி அச்சிறுவனின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது. அவனுக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை என்ன அல்லது அவன் மீது துப்பாக்கிச் சூடு பட்டதா என்பதை SIU உறுதிப்படுத்தவில்லை.
கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக, வாகனத்தை ஓட்டிய 12 வயது சிறுவன் மீது மோட்டார் வாகனத் திருட்டு, 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தமை, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை, காவல்துறையினருக்காக வாகனத்தை நிறுத்தத் தவறியமை, அமைதிப் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியமை மற்றும் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியோடியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
வாகனம் மோதி காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
காரில் இருந்த மற்றுமொரு சிறுவன் காவலில் எடுக்கப்பட்ட போதிலும், மூன்றாவது சிறுவன் சம்பவ இடத்தில கண்டுபிடிக்கப்படவில்லை என SIU தெரிவித்தது.
காரில் இருந்த மேலும் இரு சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு
புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய தகவலில், காரில் இருந்த மற்ற இரு சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
அவ்விரு சிறுவர்கள் மீதும் குற்றச்செயல் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், காரில் இருந்த மற்றொரு 12 வயது சிறுவன் மீது மோட்டார் வாகனத் திருட்டு மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தைக் கையாண்டமை ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.