வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது.
இன்று (24) அதிகாலை 5:00 மணியளவில் ஆரம்பமான இந்த யாத்திரையில், 60-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிவனது திருவுருவச் சிலையை அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்தியில் எழுந்தருளச் செய்து, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திப் பாடல்களைப் பாடியவாறு யாத்ரீகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர்.
தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்தப் பாதயாத்திரைக்கு, ‘மலையக இந்து குருமார்களின் ஒன்றியம்’ தனது முழுமையான ஆதரவை வழங்குகின்றது. யாத்ரீகர்கள் பல இடங்களைக் கடந்து, இறுதியில் சிவனொளிபாத மலையைச் சென்றடைந்து அங்கு தரிசனத்தில் ஈடுபடவுள்ளனர்.