தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற இந்நாளில், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18”, “தமிழின அழிப்பு நாள்” ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் முதல் அம்சமாக, ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, ஈழப் போராட்டத்தில் தனது காலை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கத்தால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
“உயிரிழந்த உறவுகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.
0
மல்வானை காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம் ; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!