சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று நாட்டிற்குள் எவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்பது பற்றி பேச வேண்டியது அவசியமாகும். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமித்து அந்த நியமனங்களை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி, தேவையற்ற விதத்தில் அனைவரிடமும் பழிவாங்கும் நடவடிக்கைகளே இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, அரசியல் ரீதியாகத் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே தற்போது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் 70 வருட சாபம் பற்றிப் பேசினார்கள். உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது இங்கும் விலை உயர்த்தப்பட்டால் அரசாங்கம் எதற்கு என்று அன்று கேட்டார்கள். இது போன்ற பல விடயங்களை எம்மால் கூற முடியும்.
ஆனால், அந்த விடயங்களைப் பேசுவதற்கு முன்னதாக, இந்த நாட்டில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கருத்தைக் கொண்டிருந்தாலும், 60 வருடங்களுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வர முடிந்தமைக்குக் காரணம், கடந்த காலங்களில் ஜனநாயகத்தை மதித்து இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையே ஆகும்.
சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் எதையும் காணக் கூடியதாக இல்லை.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பு கொண்டு வரப்பட்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
அண்மையில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் ஒரு சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க முடியாமல் போயுள்ளது. நியமிக்கப்பட்ட தலைவர் சில நாட்களிலேயே பதவி விலகினார். இந்த விடயத்தைக்கூட இவர்களால் முறையாக முன்னெடுக்க முடியாமலுள்ளது.
நீதிமன்றம் பல பணிகளைச் செய்து வருகின்றது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பாகக் கிடைக்கவுள்ள தீர்ப்பை இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில், நீதித்துறையின் மீதுள்ள முழுமையான கௌரவத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் அவ்வாறே பேணப்படும் என்ற நம்பிக்கையில், இந்த வழக்கு நடவடிக்கைகளும் சரியாக முன்னெடுக்கப்பட்டு சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.
இந்த நாட்டுக்காக வரலாற்றில் இருந்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காக எதையாவது செய்த கட்சிகளாகும்.
எனவே, இந்த நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.