குடிவரவு ஆவணங்களில் தவறான விபரங்களை வழங்குவதற்குத் தூண்டியதாகக் (counselling immigration misrepresentation) குற்றத்தை ஒப்புக்கொண்ட சாஸ்கடூன் (Saskatoon) பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நிபந்தனையுடனான சிறைத்தண்டனையும் (conditional sentence), 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பல்வீர் சிங் (Balvir Singh) என்ற இந்த நபருக்கான தண்டனை கடந்த ஜூலை 8 ஆம் திகதி வழங்கப்பட்டது. இத்தண்டனையின் ஒரு பகுதியாக அவர் 40 மணித்தியாலங்கள் சமூக சேவையிலும் (community service) ஈடுபட வேண்டும்.
சாஸ்கடூன் பகுதியிலுள்ள இலாப நோக்கற்ற நிறுவனம் (non-profit) ஒன்றுடன் தொடர்புடைய குடிவரவு விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் இந்த விசாரணை தொடங்கியதாக கனடா எல்லைச் சேவைகள் முகமையகம் (CBSA) தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாகாண குடிவரவு விண்ணப்பங்களில் போலியான வேலைவாய்ப்பு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வெளிநாட்டுப் பிரஜைகளை சிங் தூண்டியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆவணங்களில் போலியான ஊதிய விபரப் பட்டியல்கள் (fake pay stubs), வேலை வாய்ப்புக் கடிதங்கள் மற்றும் உண்மையில் இல்லாத வேலைகளுக்கான வேலைவாய்ப்புப் பதிவுகள் ஆகியவை அடங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில தனிநபர்கள் பின்னர் தங்களது அனுமதிப் பத்திரங்களின் (permits) கீழ் அங்கீகரிக்கப்படாத விநியோகம் (delivery), கட்டுமானம் மற்றும் உணவக வேலைகளில் ஈடுபட்டதாக CBSA தெரிவித்துள்ளது.
குடிவரவு அனுசரணைக்காக (immigration sponsorship) வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இருந்து 40,000 டாலர் வரை சிங் வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Immigration and Refugee Protection Act) கீழ் உள்ள ஒரு குற்றச்சாட்டை கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.