டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளப் பதிவொன்றில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, சனிக்கிழமை இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் ப்ளூர் வீதி மேற்கு (Bloor Street West) மற்றும் கிறிஸ்டி வீதி (Christie Street) பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்தபோது, கத்திக் குத்துக் காயங்களுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவரையும், 19 வயதுடைய யுவதி ஒருவரையும் கண்டறிந்தனர். காயமடைந்த இருவருமே உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 5 அடி 10 அங்குல உயரமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண் சந்தேகநபரையே பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் கடைசியாக இருண்ட நிறத்திலான ஸ்கை மாஸ்க் (ski mask) முகமூடியையும், இருண்ட நிற ஆடைகளையும் அணிந்திருந்தவாறு காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.