சென்னை:
காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ளார் அமைச்சர் நிர்மல் குமார் என்றும், காவிரி தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வரும் சூழலில், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி தவெக அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய்யும், நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்தும் மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என ரகுபதி விமர்சித்துள்ளார். ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், ஆனால் காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.
மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் முழுமையான ஓய்வு நிலைக்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் ரகுபதி ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
#Ragupathy #CMVijay #CauveryIssue #DMK #TVKGovt #NirmalKumar #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #MekedatuDam #PoliticalUpdate #TamilNewsLive