மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை தாக்குதலால் முற்றாக அழிவடைந்துள்ளதாக, மட்டக்களப்பு திறந்த வெளிச் சிறைச்சாலை பொறுப்பதிகாரி திலிப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பின்னால் உள்ள திருப்பெருந்துறை திறந்தவெளி சிறைச்சாலை காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், நள்ளிரவு வேளையில் வயல் நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை மிதித்தும் உண்டும் அழித்துள்ளது. குறித்த யானையை விரட்டுவதற்காக பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யானை வெடிகளைக் கொளுத்தியும், டயர்களை எரித்தும் தீவிர முயற்சி எடுத்தனர். எனினும், அந்த யானை மீண்டும் மீண்டும் வயல் நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்கைதிகளின் கடும் உழைப்பில் உருவான இந்த நெற்செய்கை, அறுவடைக்குச் சில நாட்களே இருந்த நிலையில் முற்றாக அழிந்துள்ளமை சிறைச்சாலை நிர்வாகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.