கனடாவில் கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், விஜயரத்தினம் தனுஷன் என்பவரை (இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர்) அவரது வாகனத்திலிருந்து தமிழீழ தேசியக்கொடியை அகற்றுமாறும் தன்னைத் தாக்குவேன் என மிரட்டியுள்ளதாகவும் வீடியோக்களையும் குரல்பதிவுகளையும் எமது Behind me ஊடக நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக தனுஷன் பகிர்ந்துள்ளார்.
மே 20 ஆம் திகதியன்று கனடி சியோன் விற்பனை நிலையத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் அருகில் வந்து தனது வாகனத்தை மறித்து அதற்குள் ஏற முற்பட்டார் எனவும் அதை தான் தடுத்துவிட்டு என்ன விடயம் என அவரை விசாரித்தபோது கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது வாகனத்திலுள்ள தமிழீழ தேசியக்கொடியை அகற்றிவிடுமாறும் இல்லாவிட்டால் தன்னையும் தாக்கி தனது வாகனத்தையும் சேதப்படுத்துவேன் எனவும் அவர் மிரட்டியதாகவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.
இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர் விஜயரத்தினம் தனுஷன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே 18) பிரம்டன் சிங்குசி பூங்காவுக்குச் சென்று அங்கே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரனை இலங்கை இராணுவம் அழித்த காட்சிகளையும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது மக்களுக்குக் கிடைக்காத நீதி பற்றியும் கனடாவிலுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார் .
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலையும் தனது நிறுவனத்தின் ஊடாக அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் மார்க்கம் எம்.சி பிளாஸா சென்று அங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அவரால் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் ஸ்கார்பரோவில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விஜயரத்தினம் தனுஷன் வழங்க முற்பட்டபோது அங்கு வந்த ஒருவர், தனது இலக்கியா நிறுவனம் குறித்தும் தன்னைத் தமிழ்த் தேசியவாதி இல்லை என்றும் இலங்கை இராணுவத்தோடு நிற்பவர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைக் கையாடல் செய்தவர் எனவும் தன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி Behind me ஊடக நிறுவனத்தோடு தான் செயற்படும் போது இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கு Behind me வேலை செய்வதாகவும் தன்னையும் அதே கட்டமைப்புக்குள் கொண்டு கருத்துக்கள் வெளி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேற்குறித்த மிரட்டல்களுக்கு அடிபணிந்து தேசியம் சார்ந்து பயணிக்கும் தனது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் தன்னால் செய்ய முடியாது என்பதையும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் தான் செயற்படுகின்றேன் என்பதை முற்றுமுழுதாக மறுப்பதோடு இரு சகோதரர்களை யுத்தத்தில் பறிகொடுத்தவன். போராட்டத்தின் தார்மீகம் குறித்த சிந்தனையோடு இன்று வரை வாழ்ந்து வருகின்றேன் எனவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.