ஓவன் சவுண்ட் நகரில் செவ்வாய்க்கிழமை வாகனமொன்றில் மோதி காயமடைந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு 14 ஆவது வீதி (14th Street West) மற்றும் ஆல்பா வீதிக்கு (Alpha Street) அருகில் நடந்து சென்ற சிறுவன் ஒருவன் வாகன விபத்தொன்றிற்கு முகங்கொடுத்துள்ளதாக, நேற்று பிற்பகல் 3:25 மணியளவில் பொலிஸாருக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவசர மருத்துவ உதவியாளர்கள் (Paramedics) வரும் வரை காயமடைந்த சிறுவனுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், அவனது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தைப் பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் சோதனையிட்டுப் பதிவு செய்யும் வரை அப்பகுதி தற்காலிகமாகப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது. சான்றுகள் சேகரிக்கப்பட்டதை அடுத்து, அவ்வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“காலநிலை வெப்பமடைந்து வருவதால் வீதிகளில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. எனவே, வாகனச் சாரதிகள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், குறிப்பாகப் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுகின்றனர்” என ஓவன் சவுண்ட் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.