வடக்கு ஒஷாவா பகுதியில் அமைந்துள்ள ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ (Tim Hortons) உணவகத்திற்கு வெளியே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னதாக அங்கு இடம்பெற்ற பரபரப்புத் தருணங்கள் குறித்து, உயிரிழந்தவரின் உறவினரும் நண்பரும் முதன்முறையாக ஊடகங்களுக்கு விபரித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய நபர், ‘எம்ரான் யூசுபி’ (Emran Yousufi) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவரது குடும்பப் பிரதிநிதி ஒருவர் சி.டி.வி (CTV News Toronto) செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு, ‘ஹைவே 407’ (Highway 407) மற்றும் ‘சிம்கோ ஸ்ட்ரீட் நோர்த்’ (Simcoe Street North) சந்திப்பிற்கு அருகிலுள்ள உணவகத்தினுள் தாங்கள் அனைவரும் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 5 அல்லது 6 பேரடங்கிய குழுவொன்று உரத்த ஒலியில் இசையை இசைத்தவாறு அங்கு வந்ததாக யூசுபியின் உறவினரான ஏபெல் முகமதி (Abel Mohammadi) மற்றும் அவர்களது நண்பரான அலி அப்துல்லா (Ali Abdullah) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அக்குழுவினர் முகமதியுடன் பேச வேண்டும் எனக் கோரியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் வெளியே செல்லச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
“மோதலின் முதல் குத்து எனது மூக்கிலேயே விழுந்தது” என இத்தாக்குதலில் தனது நெற்றிப் பொட்டிலும் பலத்த காயமடைந்த முகமதி தெரிவித்துள்ளார். “அடுத்த கணமே மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த வன்முறை வெடித்துள்ளதுடன், ரிம் ஹோர்ட்டன்ஸ் உணவகத்தின் கண்ணாடிச் சன்னல்களுக்கு அருகேயுள்ள நடைபாதையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
“அவர்களில் ஒருவன் தனது இடுப்புப் பையிலிருந்து (Fanny pack) இரும்புத் தடியை (Baton) எடுத்து முகமதியைத் தாக்க முயன்றான்” என நண்பரான அப்துல்லா விபரித்துள்ளார். “அங்கு ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தனர் என நம்புகிறேன். அவர்கள் முகமதியைச் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றபோது, அவரும் அவரது உறவினரான அண்ணனும் (உயிரிழந்தவர்) அவர்களைத் தடுத்து விலக்க முயன்றனர்; ஆனால் அது முடியாமல் போனது.”
இதற்கிடையில், எதிர்பாராத விதமாக அக்குழுவில் இருந்த ஒருவன் திடீரெனக் கத்தியை எடுத்து யூசுபியை சரமாரியாகக் குத்தியதாக அப்துல்லா அந்த அதிர்ச்சித் தருணத்தை விபரித்துள்ளார்.
‘அவன் முன்னின்று தடுத்தான்’
கொலைச் சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், ஆபத்தில் இருந்த தங்களைப் பாதுகாக்கத் துணிச்சலுடன் செயற்பட்ட யூசுபியின் இழப்பை முகமதியினாலும் அப்துல்லாவினாலும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவனது எப்போதும் மகிழ்ச்சியான குணத்தையும் வீரத்தையும் அவர்கள் கண்ணீருடன் நினைவு கூர்கின்றனர்.
“எனக்கு எப்படிப்பட்ட ஒரு சகோதரன் இருந்திருக்கிறான் என்று இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னை அக்குழுவினர் தாக்க வந்தபோது, அவர்களைப் பற்றி ஏதும் அறியாத நிலையிலும், எனது உயிரைக் காப்பதற்காக அவன் முன்னின்று தடுத்து என்னைப் பாதுகாத்தான்” என முகமதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யூசுபி ஆப்கானிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும், நான்கு உடன்பிறப்புகளில் அவரே இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்குடும்பம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கனடாவிற்குக் குடிபெயர்ந்துள்ளது.
அவனது திடீர் மரணத்தால் பெற்றோர் முற்றாக நிலைகுலைந்துள்ளதோடு, ஒரு மின்சாரப் பொறியியலாளராக (Electrical engineer) வரவேண்டும் என்ற யூசுபியின் கனவும் இத்தோடு கருகிப்போயுள்ளது.
“அவன் கண்ட கனவுகள் அனைத்தும் ஒரேயொரு முட்டாள்தனமான செயலால் பறிக்கப்பட்டுவிட்டன” என அப்துல்லா கவலை வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனுக்கு எதிராக இரண்டாம் நிலைக்கொலை (Second-degree murder) குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police) தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை உயிரிழந்தவர் முன்னரே அறிந்திருக்கவில்லை: பொலிஸ்
பாதிக்கப்பட்ட நபரும், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் இந்த மோதலுக்கு முன்னர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை எனத் தாம் நம்புவதாகப் பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
“தற்போதைய நிலையில் வேறு சந்தேகநபர்கள் எவரும் தலைமறைவாக இல்லை. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனப் பொலிஸ் அதிகாரி நிகோலஸ் கிளக்ஸ்டைன் (Nicholas Gluckstein) தெரிவித்துள்ளார். மேலும், “இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு சம்பவம் அல்ல எனவும், திட்டமிடப்படாத ஒரு தனிப்பட்ட மோதல் என்றும் நாங்கள் கருதுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இரு குழுக்களையும் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருவரையொருவர் முன்னரே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இரு தரப்பிலும் உள்ள ஒருசில குறிப்பிட்ட நபர்களுக்கு இடையே இருந்த முந்தைய பகையே இந்த மோதலுக்குக் வழிவகுத்துள்ளதாகப் பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
தாம் இன்னும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ள முகமதியும் அப்துல்லாவும், இக்கொடூரச் செயலுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிறுவனாக இருந்தாலும், அவனுக்கு ஒரு பெரியவருக்குரிய (Adult) தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும், அப்போதுதான் இனிவரும் காலங்களில் மற்றுமொரு குடும்பம் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“கனடாவிற்கு வந்த பின்னர் அனைவரும் வேலைவாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சியாகவே இருந்தோம். ஆனால், இந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், எங்களையும் பேராழாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என முகமதி கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரையான காலப்பகுதியில், அந்தப் பகுதியில் இருந்தவர்களிடம் ஏதேனும் தகவல்களோ அல்லது காணொளிப் பதிவுகளோ (CCTV/Dashcam) இருந்தால், உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.