சென்னை:
கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், எதிர்க்கட்சித் தலைவரைச் சிறைப்படுத்துவதைத் தவெக அரசு தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி நீர் உரிமைக்காகத் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார். கூட்டத்தினர் பிரபல நடிகையின் பெயரைக் கூறி கூச்சலிட்டபோது, அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி பேசியது, தற்போது தேசிய அளவில் விவாதிக்கும் அளவுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோன்ற இரட்டைப் பொருள் தரும் எள்ளல் நடையில் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை, நாகரிக அரசியலுக்கும் ஏற்புடையதல்ல. சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப உணர்ச்சிவயப்பட்டுத் தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலான அந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று திருமாவளவன் தனது அதிரடியான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில், தவெக அரசுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். தற்போதைய நிலையில், காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும்” என்று அவர் தனது அறிக்கையில் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
#Thirumavalavan #UdhayanidhiStalin #VCK #DMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #TVKGovt #PoliticalUpdate #TamilNewsLive