பணப்பறிப்புக் குழுவொன்றினால் எட்மண்டன் (Edmonton) நகரைச் சேர்ந்த நபரொருவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கல்கரி (Calgary) நகருக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகக் கல்கரி பொலிஸ் திணைக்களம் (CPS) தெரிவித்துள்ளது.
கடந்த மே 6 ஆம் திகதி, பாதிக்கப்பட்ட நபர் எட்மண்டனில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பலவந்தமாகக் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட பின்னர், கல்கரியின் ‘சிட்டிஸ்கேப்’ (Cityscape) குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் அவ்வில்லத்திலிருந்து மற்றுமொரு நபரைத் தந்திரமாகக் கவர்ந்து வெளியே வரவழைக்க முயற்சித்ததாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குப் பாதிக்கப்பட்ட நபர் ஒத்துழைக்க மறுத்தபோது, அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இலக்கு வைக்கப்பட்ட அந்த நபர் மற்றும் அவரது மனைவியும் அச்சுறுத்தப்பட்டு, மீண்டும் வீட்டிற்குள் துரத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட நபர் அன்றைய தினம் நள்ளிரவில் சந்தேகநபர்களினால் மீண்டும் எட்மண்டன் நகரில் கொண்டுவந்து விடப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளார்.
வடகிழக்கு கல்கரி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனைகளின் போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றையும் (Privately manufactured firearm) புலனாய்வாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளவர்கள்:
-
தக்ஷ் கௌதம் (25)
-
பிரதீப் சிங் (24)
-
தரன்வீர் சிங் (24)
-
ஆகாஷ்தீப் சிங் (18)
இவர்கள் நால்வருக்கும் எதிராகக் கடத்தல், ஆள் கடற்றம், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய கல்கரியைச் சேர்ந்த ககன்தீப் சிங் (29) என்ற மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கல்கரி நகரில் மாத்திரம் இவ்வாறான மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) சம்பவங்கள் 45 பதிவாகியுள்ளதுடன், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இதில் அடங்குவதாகக் கல்கரி பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.