மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் மற்றும் எல் நினோ காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின், இலங்கை தனது உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மட்டுமே ஒரே தீர்வாகும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வாகன இறக்குமதி வரிகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழல் உலகச் சந்தையில் ஒரு பெரும் நிச்சமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் இலங்கை போன்ற நாடுகளின் எரிபொருள் விலையையும், பணவீக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன.
இந்த உலகளாவிய அதிர்ச்சிகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், காணிப் பயன்பாடு, மனித வளம் மற்றும் தொழில்துறைகளில் உள்ள தடைகளை நீக்கி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதற்கான ஒரே வழியாகும்.
அதேபோல, வரவிருக்கும் எல் நினோ காலநிலையால் வறட்சி ஏற்பட்டால், நீர்மின் உற்பத்தி குறைந்து டீசல் மற்றும் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியைச் சார்ந்திருக்க வேண்டியேற்படும். இது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தரக்கூடும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துதல் குறித்துப் பார்க்கையில், நாம் எமது கையிருப்புச் சேமிப்பில் இருந்து கடனைச் செலுத்தக் கூடாது; அவ்வாறு செய்தால் சர்வதேச கடன் தரப்படுத்தலில் எமது நாட்டின் நிலை மேலும் வீழ்ச்சியடையும்.
எனவே, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் வரும் டொலர்களைக் கொண்டே நாம் கடனைச் செலுத்த வேண்டும் அல்லது பழைய கடன்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தற்சமயம் எமது கடன் தரப்படுத்தல் ஊ1010 மட்டத்தில்தான் உள்ளது, இதனை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காகவாவது குறைந்தபட்சம் டீ மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலமாகச் சந்தைக்குச் சாதகமான சமிக்ஞைகளை வழங்க வேண்டும்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை கூடும் போது உள்நாட்டிலும் விலையை மாற்றுவதே பொருத்தமானது. இலங்கையில் 70 சதவீதத்க்கும் அதிகமான எரிபொருளை வசதி படைத்தவர்களே பயன்படுத்துவதால், மானியங்கள் வழங்குவது அவர்களுக்குத்தான் சாதகமாக அமைகிறது. மேலும், தொடர்ந்து மானியங்களை வழங்க அரசிடம் போதிய நிதி இல்லை.
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் வரிகள் குறித்துப் பேசுகையில், தற்சமயம் வாகனங்களுக்கு 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி இவ்வாறான கூடுதல் வரிகளை நீடிக்க முடியாது.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் இந்த கூடுதல் வரிவிதிப்பை நீடிப்பது பொருத்தமற்றது. எனினும், அதனை ஒரேயடியாக நீக்கும் போது, மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் கடிதங்களை திறக்கச் செய்யத் தொடங்குவார்கள்.
இது சந்தையில் மீண்டும் ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்பதால், அரசு வருமானத்தை ஈட்டுவதைப் போலவே தனது செலவுகளையும் முறையாக முகாமைத்துவம் செய்ய பழக வேண்டும் என்றார்.