இலங்கை சிறைச்சாலையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று (22) பாம்பன் பாலத்துக்கு முன் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியதோடு, அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து நீர்கொழும்பு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.
மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதான வீதியில் மீனவ குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் வீதிமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் வீதி பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில்,
தமிழக அமைச்சரவையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேவேளை இந்திய பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவைப் பெற்றுத்தர வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 27ஆம் திகதி மீனவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.