இந்திய அமைதிப்படை காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட பத்தாயிரம் பேர் குறித்த விபரங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் வெளியிட்டுள்ளது
இது குறித்து சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது.
1980களின் இறுதிப்பகுதியில் இந்திய அமைதிகாக்கும் படை
இலங்கையில் இருந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டவர்களது பெயர்விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வெறும்
எண்ணிக்கையல்ல| இல்லாமலாக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும். இவர்களில்
பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்களாவர்.

‘இந்த வன்முறை டிஜிற்றல் காலத்திற்கு முன்பு இடம்பெற்றது – இதில் பாதிக்கப்பட்டவர்களது
முழுமையான விபரங்கள் ஒருபோதும் கணக்கிடப்படவில்லை, அதிகாரபூர்வமாகப்
பதிவுசெய்யப்படவுமில்லை, வரலாற்றிலிருந்து முற்றிலிலுமாக அழிக்கப்பட்டனர்” என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். ‘திட்டமிட்டு அழிக்கப்பட்ட
அடையாளங்களை மனித கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே நாம் இப்போது
செய்துகொண்டிருக்கும் பணியாகும்.”
இந்திய அமைதி காக்கும்படை, இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு
உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ்
ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்காக 1987ஆம் ஆண்டு ஒக்ரோபரில்
இலங்கைக்கு அனுப்பப்பட்டு, 1990 மார்ச் வரை அங்கே இருந்தது. இக்காலப்பகுதியில், இலங்கை
இராணுவம் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியப் படையினரும்
அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் பல கூட்டுப்படுகொலைகள், கொலைகள்,
சட்டத்திற்கு முரணான படுகொலைகள், வலிந்த காணாமல் ஆக்கப்படுதல் போன்ற உட்பட
பரவலானதும் திட்டமிட்டதுமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பகரமான
குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இங்கே பட்டியலிடப்பட்டவர்கள் அனைவருமே இந்தியப்
படைகளாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களாலும் மட்டும்
பாதிக்கப்பட்டவர்களல்ல என்றபோதிலும், இந்தத் தரவுகளின் தொகுப்பானது, இந்தியப்படைகள்,
அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள், மற்றும் இலங்கையின் தமிழ் ஆயுதக்குழுக்கள்
உட்பட பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான வன்முறைகளின் ஒரு
அமைப்புசார் வடிவத்தினை வெளிப்படுத்துகின்றது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும்,
அதற்குப் பொறுப்புக்கூறல் இன்மையும் மறுக்கப்படமுடியாத ஒன்றாகும்.
இந்தத் தரவுத்தளம் அன்றைய காலப்பகுதியில் பெறப்பட்ட சத்தியப்பிரமாணங்கள், அரச சார்பற்ற
அமைப்புக்களின் அறிக்கைகள், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட
தகவல்கள், சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் – சர்வதேச மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நியமங்களை
நிவர்த்தி செய்யத்தக்க வகையிலும், அவற்றிற்கு அமைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதேசம், பாலினம், காலப்பகுதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர்களை தேடும்
வகையிலும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘இது ஒரு உயிருள்ள ஆவணக் களஞ்சியம். குடும்பங்களே இச்செயற்பட்டின் மையமாக
உள்ளனர் – சாட்சிகளாக மட்டுமன்றி, உண்மையின் பாதுகாவலர்களகவும் அவர்கள்
உள்ளார்கள்” இவ்வாறு இச்செயற்றிட்டத்திற்கு ஆலோசகராகச் செயற்பட்ட மனித உரிமைகள்
தரவு ஆய்வுக்குழுவைச் சேர்ந்த மிசேல் டுகிச்
தெரிவித்தார்.
‘முப்பது வருடங்கள் கடந்துவிட்டன, இனி கேள்வி என்ன நடந்தது என்பதல்ல. மாறாக எதற்காக
யாரையும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கவில்லை – இன்னும் எத்தனை காலம்தான்
தண்டனையின்மை நீடிக்க அனுமதிக்கப்படும் என்பதே கேள்வி” என யஸ்மின் சூக்கா
தெரிவித்தார்.