சென்னை
தமிழகச் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட் குறித்துப் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கடுமையான விமர்சனங்களையும், சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்! சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண் நிதிநிலை அறிக்கையின் நிறை குறைகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “இன்றைய வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் பட்டயப் படிப்புக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பும், அவரது பெயரிலும் மற்றும் அஞ்சலை அம்மாள் பெயரிலும் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளும் மனமார வரவேற்கத்தக்கவை. இதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், விவசாயத்திற்கு மிக மிக அத்தியாவசியமானத் தண்ணீருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே விவசாயம் முழுமையாகச் செழிக்கும்” எனக் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து தவெக அரசைச் சாடிய அவர், “விவசாயிகளின் மிக முக்கியக் கோரிக்கையான கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. அதேபோல, நெல் கொள்முதல் விலையை கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் பாழாகாமல் இருக்க நிரந்தர மேற்கூரைகள் அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டால், வெறும் தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தார்பாய் திட்டம் விவசாயிகளுக்கு எந்தளவுக்குக் கை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
#SoumyaAnbumani #PMK #AgriBudget2026 #TVKGovernment #ThalapathyVijay #TamilNaduPolitics #TNPolitics #Chennai #IrrigationSchemes #FarmersIssue #PaddyProcurement #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNAssembly #TamilNaduNews #PoliticalUpdatesTN