சென்னை:
காவிரி சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன் என்றும், அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து முனைப்போடு செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குமே பெரும் தலைகுனிவாகும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம் தவெக அரசு உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால், தன் மீதும் நாம்தமிழர் கட்சியினர் மீதும் அவதூறுகளையும் ஆபாசத் தாக்குதல்களையும் தொடுக்கும் தவெகவினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களைக் கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன்? ‘சீமான் பழைய சாமான்’ எனத் தரக்குறைவாகப் பேசிய லயோலா மணிக்கு பாடநூல் கழகத் தலைவர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது தான் முதல்வரின் நாகரிக அரசியலா?” என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார். தவெக எம்.எல்.ஏ சரவணன் உள்ளிட்டோர் மீதான பாலியல் புகார்களை விசாரிக்காதது ஏன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரிப்படுகையில் குறுவை, சம்பா சாகுபடி பொய்த்துப் போயுள்ள நேரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், வறட்டு கவுரவத்துக்காக மாநிலத்தின் கவனத்தைத் திசை திருப்புவது வெட்கக்கேடானது என்று சீமான் சாடியுள்ளார். சகிப்புத்தன்மையே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை மறந்து, மேடைகளில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதில் இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனத் தவெக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
#Seeman #UdhayanidhiStalin #CMVijay #TVKGovt #NTK #CauveryIssue #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive