தஞ்சை:
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துச் சர்ச்சையாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் காவல்துறையினர் இன்று காலை 11 மணியளவில் அதிரடியாகக் கைது செய்தனர். அங்கிருந்து அவரைத் தஞ்சாவூர் அழைத்துச் செல்ல போலீசார் புறப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்து விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலிஸ் வேனிலேயே பயணம் செய்த உதயநிதி ஸ்டாலினை, தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் திரண்டிருந்ததால், காவல்துறையினர் திட்டத்தை மாற்றி கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழக்கு பதியப்பட்ட தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, காவல் வாகனத்தை விட்டு இறங்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மறுப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த ஐஜி பாலகிருஷ்ணன் உதயநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்து வாகனத்தை விட்டு இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களை நோக்கிச் புன்னகையுடன் கையசைத்தார். மாலை 6.45 மணி முதல் அவரிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் போலிஸ் வாகனங்கள் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
#UdhayanidhiStalin #SengipattiPoliceStation #DMK #TVKGovt #ThanjavurPolice #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #IGBalakrishnan #PoliticalUpdate #TamilNewsLive