பி.சி. (B.C.) மாநிலத்தில் நடைபெற்ற ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினரும் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரும் (RCMP) தெரிவித்துள்ளனர்.
பி.சி.யின் வெஸ்ட் கூட்டனே (West Kootenay) பிராந்தியத்தில் உள்ள சால்மோ (Salmo) அருகே நடைபெற்ற நான்கு நாள் மின்னணு இசை விழா ஜூலை 27 அன்று நிறைவடைந்த நிலையில், அப்பெண் காணாமல் போயுள்ளதாகக் அறிவிக்கப்பட்டது.
அவரது மறைவு குறித்த செய்தி, விழாவுக்கு வந்திருந்த சமூக உறுப்பினர்களிடையே உடனடியாக சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பரவலாகப் பகிரப்பட்டு, அவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.
சிபிசி நியூஸுக்கு அனுப்பிய அறிக்கையில், நிதி நன்கொடைகள் உட்படத் தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். அந்த நிதித் தொகையானது பயணச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதுடன், மீதித்தொகை பொலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு உதவிய உள்ளூர் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேடுதல் பணியில் “சடைவில்லா தீவிர கவனம்” செலுத்தியதற்காக பொலிஸாருக்கும் (RCMP) இசை விழா அமைப்பாளர்களுக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
“இந்த விசாரணை முன்னகர உதவிய மதிப்புமிக்க தகவல்களை வழங்கிய” தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களுக்கும், பொதுமக்களுக்கும் பொலிஸார் (RCMP) தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
தற்போது தங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து அமைதி தருமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.