சென்னை:
தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக அரசு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர்மாறாகக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான கருவிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததுமே இந்த மின்கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால் பலரது மின்பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் தாண்டியதால், இலவச மின்சாரப் பலன் கிடைக்காமல் போனதோடு ஒரு யூனிட்டிற்கான கட்டணமும் கடுமையாக அதிகரித்துள்ளது. மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே என்று தவெக அரசு மக்களை ஏமாற்றியது போதாதென்று, தற்போது கணக்கீட்டில் குளறுபடி செய்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது பெருங்கொடுமை என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டுப் பன்மடங்கு கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களின் மின்கட்டணத்தை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் சீமான் ஆணித்தரமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Seeman #EBBillHike #TNEB #TVKGovt #NTK #CMVijay #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #ElectricityBill #PoliticalUpdate #TamilNewsLive