சென்னை:
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்துச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசின் நிதி வீணடிக்கப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் சாசனப் பிரச்சினை எழுப்பக்கூடும் எனக் கூறி தற்காலிகத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாததால், அந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
#ByElections #MadrasHighCourt #CMVijay #TrichyEast #Karur #Viralimalai #Perundurai #Ambasamudram #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #ElectionCommission #PoliticalUpdate #TamilNewsLive