கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
ஈழ வரலாற்றிலும் உலக மனித உரிமைப் பரப்பிலும் “செம்மணி” என்ற சொல் வெறும் ஒரு நிலப்பரப்பைக் குறிப்பது அல்ல மாறாக, அது ஆறாத காயத்தின், பேரழிவின், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாக உள்ளது.
1995-1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் சித்திரவதைகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1998 இல் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியத்தினைத் தொடர்ந்து செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
நீண்ட தசாப்தகால மௌனத்திற்குப் பிறகு, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் அகழ்வாராய்ச்சிகளில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என சகல வயதுத் தரப்பினரதும் நூற்றுக் கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
இது, தங்கள் உறவுகளைத் தேடிப் போராடும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆறாத துயரத்தையும் அதிர்ச்சியையும் மீண்டும் மீண்டும் அளித்துக்கொண்டிருக்கின்றது.
எமது மண்ணில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால வடுக்கள், நில அபகரிப்புகள் மற்றும் நீதியின்மைகள்… தொடரும் சூழலில் ‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு. உரிமைக்குரல் கொடுக்க நாற் திசைகளிலுமிருந்து ஒன்று திரண்டு ‘விழித்தெழு தமிழா’ நிகழ்வுக்கு வலுச் சேர்ப்போம்!