மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மஹர சிறைச்சாலைக்கு வெளியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
(UPDATE): மஹர சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (01) மாலை மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் சிறைச்சாலை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர், அதேவேளை சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குக் கைதிகள் தீ வைத்துள்ளதாகவும், தீயை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கைதிகளைப் பார்ப்பதற்காக இன்று பிற்பகல் மஹர சிறைச்சாலைக்கு வந்த கைதிகளின் உறவினர்கள் சிறை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதற்கமைய, அந்த உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலையின் வெளியில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலையின் உள்ளிருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.