மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை (1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (30) மாலை 6 மணியளவில் காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகில் இரு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் வலையைப் பரப்பிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் படகில் எரிபொருள் தீர்ந்துபோயுள்ளது.
இதனையடுத்து, நீந்திச் சென்று கரையில் இருந்து எரிபொருளை எடுத்துவரும் நோக்கில் குறித்த இளைஞர் கடலில் குதித்துள்ளார். எனினும், அக்காலப் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
அப்போது அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த பிற மீனவர்கள், கடலில் தத்தளித்த படகையும் அதிலிருந்த மற்றைய மீனவரையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அத்துடன், நீந்திச் சென்று காணாமல்போன இளைஞரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (01) காலை எருக்கலம்பிட்டி கடற்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காட்டாஸ்பத்திரி மீனவர்கள், சடலத்தை மீட்டுப் பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன் கரைக்கும் கொண்டுசென்றனர்.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.