ஐரோப்பாவைச் சென்றடைய முயன்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயணித்த ஒற்றைப் படகு ஒன்று மௌரிடேனியா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானதில், குறைந்தது 143 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாமையான UNHCR தெரிவித்துள்ளது.
மௌரிடேனியா கடற்பகுதியில் ஜூலை 14 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு இடையில் சிக்கிய பிற படகுகளிலிருந்து 387 பேரைப் பாதுகாப்பாக மீட்ட போதிலும், இந்த உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிப்பதாக செவ்வாய்க்கிழமையன்று அந்த முகமை தெரிவித்துள்ளது.
காம்பியாவின் பாபுலோட்டோவிலிருந்து புறப்பட்ட குறித்த படகு, 25 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் திகதி மீட்கப்பட்டது. அது நுவாதிபு துறைமுகத்தை அடைந்தபோது, உடல்களுடனும் 38 உயிர் பிழைத்தவர்களுடனும் இருந்தது என்று UNHCR கூறியுள்ளது.
“அந்தப் படகில் உயிர் பிழைத்தவர்களில் பயணம் செய்தபோது தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த இரண்டு குழந்தைகளும் அடங்குவர்; அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என்று UNHCR பேச்சாளர் மாட் சால்ட்மார்ஷ் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மௌரிடேனியாவில் ஜூலை 14 ஆம் திகதி கரைசேர்ந்த மற்றொரு கப்பலில் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் உப-சகாரா ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார், இருப்பினும் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பது குறித்த விபரங்களை அவர் வழங்கவில்லை.
காம்பியாவிலிருந்து 160 பேருடன் புறப்பட்ட அந்தப் படகின் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறிய மௌரிடேனியா கடலோரக் காவல்படை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை 122 எனக் குறிப்பிட்டுள்ளது.
கனரி தீவுகளுக்கான பாதை “உலகின் மிகவும் ஆபத்தானவற்றில் ஒன்று” என்று வர்ணித்துள்ள UNHCR, நீண்ட தூரம் மற்றும் கூட்ட நெரிசலான, கடலுக்குச் தகுதியற்ற படகுகளைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த ஆபத்தான கடல் பயணங்களுக்கு மாற்றாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அணுகலை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெயினின் ஒரு பகுதியான கனரி தீவுகளை அடைவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் முயற்சிக்கும் அத்திலாந்திக் பாதையில், மௌரிடேனியா ஒரு முக்கியப் புறப்படும் புள்ளியாக விளங்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் கீழ் வருகைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. இந்நிலையில், மௌரிடேனிய அதிகாரிகள் ஆயிரக்கணக்கான தஞ்சம் கோருபவர்களையும் புலம்பெயர்ந்தோரையும் நாடுகடத்தியுள்ளதுடன், மேலும் கீழ்த்திசைக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து நீண்ட மற்றும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள அவர்களைத் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.