முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புத் பிரச்சினை எழுந்துள்ளமை தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார்
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள், நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றினார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு அப்பாற்பட்ட, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான ஒரு அதிகாரியாகவே அவரை நான் பார்த்தேன்.
இன்று இந்நாட்டின் சில முக்கிய வழக்குகளில், தீர்மானமிக்க சாட்சியாக இருந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். நமது நாட்டின் பொலிஸ் வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ்மா அதிபரோ அல்லது இராணுவ அதிகாரிகளோ தற்கொலை செய்துகொண்ட வரலாறு இல்லை. ஆனால், இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.
எனவே, அரசாங்கம் இந்த விசாரணை குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு முன்னரும் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் எனச் சிலர் இந்த முறையில் தற்கொலை செய்துகொண்டனர்.
மேலும் சிலர் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இது அரசாங்கத்தின் தவறான ஆட்சி முறையின் காரணமா என்று தெரியவில்லை. ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் இந்நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
இந்நாட்டில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரச்சினை உள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு கூற்றை விடுத்து, எனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறான பொலிஸ் பாதுகாப்பை நான் கோரவும் இல்லை, எனக்கு வழங்கப்படவும் இல்லை. இவ்வாறான பொய்க் கூற்றுக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
அமைச்சர் எதையோ ஒரு தாளில் எழுதிவந்து வாசிக்கின்றார். அது ஒரு அறிக்கையா அல்லது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. ஆனால், இன்று பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்பது பாதுகாப்புத் தொடர்பில் எழுந்துள்ள பாரதூரமான பிரச்சினையாகும் என்றார்.