வுட்பைன் கடற்கரையில் (Woodbine Beach) ஒருவரைத் தீவிரமாகக் காயப்படுத்திய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, குயெல்ஃப் (Guelph) பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவர் மீது டொராண்டோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு 10:45 மணியளவில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட நபரை அணுகி, முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் கூர்மையான ஆயுதம் (edged weapon) மற்றும் பிபி துப்பாக்கி (BB gun) ஆகியவற்றால் அந்த நபரைத் தாக்கியதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தில்லாத, ஆனால் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குயெல்ஃப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஷஹாபுதீன் கபிரி (Shahabuddin Kabiry) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் மீது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்துச் சென்றமை, ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதத்தை வைத்திருந்தமை மற்றும் தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த 17 வயது சிறுவன் மீது ஆயுதம் அல்லது போலி ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் கொடுங்காயத்தை ஏற்படுத்தியமை (aggravated assault) ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் அந்தச் சிறுவனின் அடையாளம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களும் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகளாகவே கருதப்படுவர்.