கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் துறையில் (Peel Regional Police) பதவி உயர்வுக்கான பரீட்சை மற்றும் நேர்காணல் வழிமுறைகளின் போது, ரகசியத் தகவல்களைப் பெற்றுக் கொண்டமை மற்றும் பகிர்ந்துகொண்டமை (Cheating) அம்பலமானதைத் தொடர்ந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பீல் பொலிஸ் துறை திங்கட்கிழமை CP24 செய்தித் தளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், “பதவி உயர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை ஒரு சில பங்கேற்பாளர்களால் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். இது குறித்துத் தீவிரமாக விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணையின் விளைவாக, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மூவருக்கும் வழங்கப்படவிருந்த பதவி உயர்வுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் பொலிஸ் அத்தியட்சகர் (Superintendent) மட்டத்திலோ அல்லது வேறு எந்தவொரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கோ தொடர்பிருப்பதாக எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களைக் (Privacy laws) காரணம் காட்டி, அந்த அதிகாரிகளுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடப் பொலிஸார் மறுத்துவிட்டனர். இந்த விவகாரமானது ‘சமூகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தின்’ (Community Safety and Policing Act) கீழ் உள்நாட்டு ஒழுக்காற்று நடவடிக்கையாகக் கையாளப்பட்டதால், இதனைப் பகிரங்க விசாரணைக்குக் (Hearing) கொண்டு செல்ல வேண்டிய தேவை எழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு வழிமுறைகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறாத வண்ணம் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் (Additional safeguards) அடையாளம் காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பீல் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் டொராண்டோ பொலிஸ் துறையிலும் (Toronto Police Service) இதேபோன்றதொரு பதவி உயர்வு மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, பல அதிகாரிகளுக்கு மோசடியாக உதவிய குற்றச்சாட்டில் உயர்மட்ட பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி இறக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.